(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழகத்தில் படிக்கும் ஒவ்வொரு மாணவரையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பள்ளிகள் பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடலூா் மாவட்டம் பெரிய நெசலூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில் தங்கி, 12ம் வகுப்பு படித்து வந்தாா். மாணவி கடந்த 13ம் தேதி மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தாா்.இதையடுத்து, அவரது மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்று கூறி பெற்றோா், உறவினா்கள், பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் தனியார் பள்ளியில் பேருந்துகள் உள்பட ஏராளமான வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதில், விழுப்புரம் சரக டிஐஜி உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனா்.தொடர்ந்து மாணவி மரணமடைந்த வழக்கில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் 329 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் வழக்கும் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கள்ளக்குறிச்சி சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.இந்தநிலையில் தமிழ்நாடு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு வேகமாக முன்னேற்றமடைந்து வரும் சூழலில், சோகத்தை ஏற்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி சம்பவம் அமைந்துள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர்.சோகமான சம்பவத்தை பயன்படுத்தி கொண்டு சிலர் சட்டவிரோத செயலில் ஈடுபடுவது வளர்ச்சிக்கு எதிரானது. அமைதியான தமிழகம் தான் அனைவருக்குமான தமிழகம் என்பதை உணர வேண்டும். பள்ளிகள், ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
