ஜூலை 26ல் தர்ணா.. ஆக.23ல் கோட்டை நோக்கி ஊர்வலம்.. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு!

 கோரி்க்கைகளை நிறைவேற்றக் கோரி வரும் 26ம் தேதி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 80 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீதமுள்ள வாக்குறுதிகள் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.அதேபோல் திமுக ஆட்சியில் இருந்தால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும், அரசு ஊழியர்களுக்கான பிரச்னைகள் விரைந்து சரி செய்யப்படும். ஆனால் இம்முறை தமிழக பொருளாதார பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதனால் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே எதிர்க்கட்சியாக இருந்த போது கொடுத்த வாக்குறுதிகளையும்,

தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்கும் போது மாநில அரசும் உயர்த்தி தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஜன.1 முதல் 7 மாதங்களாக அகவிலைப்படி 3 சதவிகிதம் தரவில்லை. இம்மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து, 4.5 லட்சம் காலியிடங்களை நிரப்புதல், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டும்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும் போது கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. இருந்தும், கொரோனா காலத்தில் அவர் சிறந்த முதல்வர் என பெயரெடுக்க காரணம் சுகாதாரத்துறை தான். அந்தத் துறை உட்பட அனைத்து துறைகளிலும் அவுட்சோர்ஸிங் முறையில் பணி நியமனம் செய்யக் கூடாது. தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் ஒன்றுகூட இதுவரை நிறைவேறவில்லை. இவற்றை வலியுறுத்தி வரும் ஜூலை 26ல் மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 23ல் கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.-

Leave a Comment