பிறவியிலேயே இரு கைகள் இல்லை; பல்கலைக்கழகத் தேர்வில் முதல் ரேங்க் பெற்று சாதித்த கண்மணி!

கேரள மாநிலம், மாவேலிக்கரை அறுநூற்றிமங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ்.கண்மணி. தந்தை சசிகுமார், தாய் ரேகா. கண்மணிக்கு, பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லை. கால் சராசரியான வளர்ச்சி இல்லாதது என உடலில் பல பிரச்னைகள் இருந்தன; ஆனால், மனம் நிறைய தன்னம்பிக்கையை கொண்டவர் கண்மணி.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பிளஸ் டூ தேர்வின் போது, தேர்வு எழுத உதவியாளர் நியமிக்காமலும், கூடுதல் கால அவகாசம் கேட்காமலும், தேர்வு எழுதி கவனம் ஈர்த்தார். எல்.கே.ஜி படிக்கும் காலத்திலேயே, கால்களால் எழுத பயிற்சி எடுத்துவிட்டார். பள்ளியில் படிக்கும் சமயங்களில் காலால் ஓவியம் வரைந்து, பரிசுகளை குவிக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டார்.

இவர், ஜனாதிபதியின் ஓவியத்தை கால்களால் வரைந்து அதை ஜனாதிபதிக்கே பரிசாக அளித்து அசத்தினார். பள்ளி படிக்கும்போது நடனம், சங்கீதம் என கலை நிகழ்ச்சிகளிலும் கண்மணி பங்கெடுத்திருக்கிறார். 2019-ம் ஆண்டில், சிறப்பான படைப்பாற்றலுக்கான மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் விருதை பெற்றுள்ளார் கண்மணி. 2019-ல் பிளஸ் டூ முடித்த கண்மணி, திருவனந்தபுரம் சுவாதி திருநாள் அரசு சங்கீத கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பி.பி.ஏ படித்தார்.

Leave a Comment