(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை: மேற்படிப்புக்கு செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி அமல்படுத்தலாமா என தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்படிப்புக்கு செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், ஐடிஐகளில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். இது அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
வரும் கல்வி ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவுசெய்துள்ள நிலையில், தகுதியான மாணவிகளை கணக்கெடுக்கும் பணிமேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளன்று (ஜூலை 15) இத்திட்டத்தை அமல்படுத்தலாமா என தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});